Saturday, January 17, 2015

கே. பி யும் நானும்

     இந்த தலைப்பை கே. பி உடன் பழகியவர்கள் மட்டும் தான் வைக்க வேண்டுமா? அவர் படங்களை அணு அணுவாய் பார்த்து ரசித்த எனக்கு இந்த தலைப்பை தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.... நான் என்று கே. பி யின் ரசிகனானேன்...  புது புது அர்த்தங்கள் (1989) அழகன் (1991)... இது இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த அவர் படங்கள்... முறையே எனக்கு 9 மற்றும் 11 வயது... சொன்னாலும் நீங்கள் நம்ப போவதில்லை... விடுங்கள்....
     அவரது படங்களை தேடி தேடி பார்த்து இருக்கிறேன்... நான் ரசித்ததை பகிர்கிறேன்....  கே. பி டச்.... தமிழ் சினிமா உலகில் பிரபலமான வார்த்தை...   அவரது வசனம் நேராக நெஞ்சை துளைக்கும் சிறு அம்பு... 
  • சர்வர் சுந்தரத்தில் ஒரு காட்சி... தன் காதலை சொல்ல நாகேஷ்  கே. ஆர் விஜயாவிடம்   பூங்கொத்து  ஒன்றுடன் வருகிறார்... காதல் மறுக்க படுகிறது... போகும் பொது குப்பை தொட்டியை எடுத்து கொண்டு செல்கிறார்....  
  •  மரோ சரித்தராவில் காதலிக்கும் இருவர் மாற்றி மாற்றி விளக்கை போடும் காட்சி... 
  • அரங்கேற்றம்- குடும்ப சூழ்நிலையால் விபச்சாரியாய் இருக்கும் கதாநாயகி வீட்டில் பலர் முன்னிலையில் புடவை விலகி விடுகிறது... அதற்கு அவள் " ஆம்பளங்கரதே மருத்து போச்சு டி" என்கிறாள்... அதை கேட்ட அவள் தாய் படத்தத்துடன் தந்தையிடம் சொல்கிறாள்... உண்மை வெளியாகி விட்டது என்று நாம் நினைக்கையில் அவள் தந்தை சொல்கிறார் " ஆம்பளங்கரதே மறந்து  போச்சு டி" என்று சொல்லி இருப்பாள்  என்கிறார் 
  • பாமா விஜயம்- சௌகார் ஜானகிக்கு ஹிந்தி தெரியும் ஆனால் ஆங்கிலம் தெரியாது...  ஓரகத்தி காஞ்சனாவிற்கு ஆங்கிலம் தெரியும் ஹிந்தி தெரியாது... பாமா என்ற நடிகை வீட்டிற்கு வருவதற்குள் ஆங்கிலம் கற்க நினைக்கும் சௌகார் "Cat" "Rat" மட்டும் படித்திருப்பார். அதற்குள் நடிகை வீட்டிற்கு வந்துவிடுகிறாள். சௌகார் பாமாவிடம் " ஒரே ""Rat" தொல்லையா இருக்கு ஒரு " Cat" வாங்கலாம்னு பார்க்கறேன் என்பார்... அதற்கு காஞ்சனா "cat" எதற்கு ஒரு "Trap" வாங்கினா போதுமே என்பார். சௌகார் என "Trap" ஆ  என விழிப்பார்
  • அவள் ஒரு தொடர்கதை - "கல்யாணத்திற்கு முன்னாடி கர்வமா இருக்கலாம் கர்ப்பமா தான் இருக்க கூடாது "  என்ற வசனம்.  வசனமே இல்லாமல் வெறும் மேள சத்தம் மட்டும் வைத்து எடுக்க பட்ட கிளைமாக்ஸ் காட்சி.
  • இரு கோடுகள் - சௌகார் ஜானகி வட நாட்டில் இருந்து வந்த கலெக்டர்.. அடிக்கடி "அச்சா" என்று சொல்வார்... அவளிடம் குமாஸ்தாவை இருக்கும் ஜெமினியை அவர் மனைவி ஜெயந்தி சௌகார் உடன் இணைத்து சந்தேகப்படுவாள். அதை நேரடியாக சொல்லாமல் வீட்டில் பாத்திரத்தை போட்டு உருட்டுவாள்... பிள்ளைகளை அடிப்பாள்... ஜெமினி அவளிடம் எனக்கு நேரமாச்சு உனக்கு என்ன பிரச்சினை? சுருக்கமா சொல்லு என்பார். ஜெயந்தி "அச்சா" என்பாள்... 
  • வெள்ளி விழா - ஜெயந்தி அமைதியான கதாநாயகி.. வாணி ஸ்ரீ ஆர்ப்பாட்டமான கதாநாயகி... இருவரையும் அவர்கள் பாடும் பாடலே வேறு படுத்தி காட்டி விடும்... "காதோடு தான் நான் பாடுவேன்"-ஜெயந்தி பாடும் பாடல்.. " நான் சத்தம் போட்டு தான் பாடுவேன்"- வாணி ஸ்ரீ பாடும் பாடல்... முன்னதை ஆர்ப்பாட்டமான பாடல்களை பாடும் எல். ஆர் . ஈஸ்வரியை பாட வைத்து இருப்பார்... அமைதியான பாடல்களை பாடும் பி. சுசிலாவை சத்தம் போட்டு தான் பாடுவேன் பாடலை பாட வைத்து இருப்பார். 
  • அச்சமில்லை அச்சமில்லை- மிக நல்லவனாக இருந்த ராஜேஷை காதலித்து திருமணம் செய்வார் சரிதா... ஆனால் அரசியலில் சேர்ந்து மிக கொடியவனாக மாறி விடுவார் ராஜேஷ்...தன் தந்தையான வி. எஸ் ராகவனை அடிக்கும் ஒரு காட்சி... அடிக்கும் சத்தம் மட்டுமே கேட்கும்.. நாம் திரையில் காண்பது சரிதாவின் முக பாவம்/ உணர்ச்சிகள் மட்டுமே.
  • அவர்கள்- எதற்குமே கலங்காத அனு கடைசியில் தன் வீட்டில் வேலை செய்தவள் தான் தன் மாமியார் என்று தெரிந்து அந்த அன்பிற்காக அழும் காட்சி 
  • அபூர்வ ராகங்கள் - ஒரு சிறிய நூலில் ஸ்ரீவித்யா கமலை கட்டி போடும் காட்சி
  • வறுமையின் நிறம் சிவப்பு-  சாப்பாடே இல்லாமல் கமல் மற்றும் நண்பர்கள் சாப்பிடும் காட்சி- முடி திருத்தும் கடையில் கமல் தன் அப்பாவான பூர்ணம் விஸ்வநாதனிடம் பேசும் காட்சி 
  • அக்னி சாட்சி - சரிதா தன் கணவர் சிவகுமாரிடம் என்ன எவ்ளோ லவ் பண்றீங்கன்னு சொல்லுங்க என்பாள்.  சிவகுமார் அவளது ஆளுயர போட்டோவை பிரேம் செய்து காட்டுவார்... சரிதா சொல்லும் குட்டி கவிதைகள் 
  • சொல்லத்தான் நினைக்கிறன்- சிவகுமாரை காதலிக்கும் ஸ்ரீவித்யா தினமும் ஒரு காதல் கடிதம் எழுதி அவரிடமே கொடுத்து தபாலில் சேர்க்க சொல்வார்... அவரும் அப்படியே செய்வார்.. வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயித்த பின் ஸ்ரீவித்யா சிவகுமாரிடம் தினமும் கொடுத்த கடிதத்தை ஒன்றை கூடவா படித்து இல்லை நீங்கள் உண்மையிலே நீங்கள் ஒரு ஜென்டில் மென் சார் என்பார்.
  • சிந்து பைரவி - கர்நாடக சங்கீதத்தின் உச்சத்தில் இருக்கும் சிவகுமார் குடி நோயாளியாக மாறி தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான் பாடல் பாடுவார். பாடலின் முடிவில் அவரது வேட்டி அவிழ்ந்து விழும் அதை  சுலோச்சனா பார்த்து கண் கலங்குவார். அந்த ஒரு நிமிடம் அவர் கம்பீரமாய் சாதகம் செய்யும் காட்சி நடுவில் ஒரு பிரேம் வந்து போகும்... 
  • உன்னால் முடியும் தம்பி-  கூலி தொழிலாலர்களுக்காக "புஞ்சை உண்டு நஞ்சை உண்டு" பாடல் பாடுவார் கமல். வீட்டில் இசை சக்ரவர்த்தியான அவரது தந்தை ஜெமினி என்ன ராகம் டா பாடின என கேட்பார்? சுத்த தன்யாசி என்பார் கமல். சுத்த தன்யாசியா அது அசுத்த தன்யாசி டா என்பார்- கமலின்  அண்ணி மனோரமா உங்க தம்பி ஹரிஜன பெண்ணை விரும்புகிறானே உங்கள் கருத்து என்ன என கேட்பார்? நாதஸ்வர வித்துவானும் ஊமையுமான அவரது அண்ணன் நாதஸ்வரத்தில் "ரகுபதி ராகவ ராஜாராம் " என்ற சர்வ மத பிரார்த்தனை பாடலை வாசித்து சம்மதம் என்ன சொல்லாமல் சொல்லுவார்.  அவர் வசிக்கும் பொது அந்த நாதஸ்வரத்தின் குழல் காந்தியின் காதுகளில் இருக்கும்.
  • புது புது அர்த்தங்கள்- ஒரு கவர்ச்சி நடிகையின் பக்கத்தில் அமர்ந்துவிட்டு வந்த பாடகர் கணவனை - "அவ கண்ண சாச்சு கைய நீட்டி எதோ சொன்னாலே அதுக்கு முன்னாடி... நீங்க ரெண்டுபேரும் சிரிச்சிங்களே அதுக்கு அப்புறம் என்ன சொன்ன ? என்ற வசனம்.. திருமண பந்தம் என்றால் என்ன என்று சௌகார் ( பேபி பெர்னாண்டஸ்) மற்றும் பூர்ணம் விஸ்வநாதன் (ரூபி பெர்னாண்டஸ்) மூலம் உணர்த்தும் காட்சிகள்....
  • அழகன்- பரதநாட்டிய கலைஞரான பானுப்பிரியா நடனமாடிக்கொண்டே மம்முட்டியை திட்டுவது... அவர் பரிசளித்த காரை சுற்றி சுற்றி வந்து பார்த்து முத்தமிடுவது... அவளது உதட்டு சாயம் காரில் பதிவது... டெலிபோன் பிரபலமான அந்த காலத்தில் டெலிபோனே ஒரு கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்ட விதம்- இரவெல்லாம் டெலிபோன் பேசுவதை தொலைக்காட்சி வழியே காட்டிய நேர்த்தி...
  • கல்கி- " நான் செய்தது சரின்னு சொல்ல வரல ஆனா  நான் செய்தது தப்பு இல்ல" என வாதாடும் காட்சி. 
இன்னும் ஏத்தனையோ படங்கள் காட்சிகள். நினைவில் வந்ததை எழுதினேன். பாடல் காட்சிக்கு அவர் தந்த முக்கியத்துவம். பாடல் படமாக்கும் விதத்தை பார்க்க வேண்டுமா? அவளுக்கென்ன அழகிய முகம் பாடல் பாருங்கள் .. மெட்டுக்கு பாட்டு எழுதும் முறையை பார்க்க வேண்டுமா? சிப்பி இருக்குது முத்தும் இருக்குது பாடலை பாருங்கள்... அந்தாதி என்றால் என்ன? வசந்தகால நதிகளிலே பாடல் கேளுங்கள்....   பாடலிலேயே கிளைமாக்ஸ் வேண்டுமா?  கேள்வியின் நாயகனே பாடல் பாருங்கள்.  இசைக்கு அவர் தந்த முக்கியத்துவம் மிக சிறந்தது. சிந்து பைரவிக்கு பிறகு தான் தமிழ் இசைக்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்தது. அபூர்வ ராகங்களில் வரும் ஒவ்வொரு பாடலும் ஒரு அபூர்வ ராகம். உன்னால் முடியும் தம்பி படத்திலும் இசைக்கு ஒரு முக்கிய இடம். கணேஷ்- குமரேஷ் வயலின், கத்ரி கோபால்நாத் சாக்ஸபோன், ராஜேஷ் வைத்யா வீணை என பல பிரபலங்களை திரையில் அறிமுகபடுத்திய பெருமை அவருக்கு உண்டு...

கதாநாயகிகளின் மேனரிசம் கே. பி யின் ஒரு சிறப்பம்சம்.. டொண்டொடைன்
 ( ஜெயசித்ரா- சொல்லத்தான் நினைக்கிறன்)...  படாபட் ( ஜெயலக்ஷ்மி- அவள் ஒரு தொடர்கதை),  விடுகதை கூறி நாக்கை ஆட்டுவது (ஜெயசுதா- அபூர்வ ராகங்கள்), இல்லை என்பது போல ஆமாம் என தலையை ஆட்டுவது (ஜெயப்ரதா- நினைத்தாலே இனிக்கும்)..உதட்டை குவித்து உச்சு கொட்டி சரி  என சொல்வது ( குஷ்பூ- ஜாதி மல்லி).

பத்திரிகைகள் பல அவரது பண்பு, அறிமுக படுத்திய புது முகங்கள் பற்றி எல்லாம் எழுதி விட்டன. எனக்கு பிடித்த சிலவற்றை இங்கு எழுதினேன். சிந்து பைரவி படத்தில் சுஹாசினி சொல்வார் " இசையை நாம் பாடி மகிழ்வது ஒரு சுகம், பிறர் பாடி கேட்பது ஒரு சுகம், இசையை பற்றி பேசி கொண்டே இருப்பது ஒரு சுகம்". அது போல " கே. பி யின் படம் பார்ப்பது ஒரு சுகம், அதை பற்றி பிறர் சொல்லி நான் படிப்பது ஒரு சுகம், அவரை பற்றி பேசி கொண்டே  இருப்பது ஒரு சுகம்".








Saturday, July 13, 2013

ஆறாவதுமகன்

சாரதா அத்தைக்கு ஒரு இரங்கற்  பா...

நினைவு தெரிந்த
நாள் முதல்
நீ என் தோழி...

சிறு வயதில்
அம்மாவுடன் சுற்றியதை விட
அத்தை அத்தையென
எத்தனையோ இடங்கள்
உன்னுடன் வந்தது தான்
நினைவிருக்கிறது....

அருணா தியேட்டர்
ஆட்டோமேடிக் திரைச்சீலை....
ஆரணி ஆற்று குளியல்
அறிமுகப்படுத்தியது  எல்லாம்
நீதானே.....

காலை உன் வீட்டில்
ஹிந்தி...
நேரம் போவதே
அறியாமல் ஆடும்  தாயம்....
மாலை நேரத்தில்
உன்னிடமே படிப்பு....
இரவில் ஆடும் சீட்டு கட்டு...
இப்படி என் விடுமுறை முழுவதும்
நீயே ஆக்கிரமித்து கொண்டாய்....

தெருப்பாடகன் படம்
புதுப்பாடகன் ஆகி
ஏகாம்பரநாதர் கோவிலில்
படமெடுக்க....
காலாற கோவில் வரை நடத்தி
பின்னிரவில்
வெண்ணிற அமலா காட்டியது.....

அரட்டை அடித்து கொண்டே
ஆஸ்பத்திரி  மூலை சென்று
வெள்ளி தேர் பார்த்தது...

பத்தாவது வரை
பரீட்சைக்கு உன்
பாதம் வணங்கியது....

பலப்பம் ஆணி கொண்டு
காம்பஸ் போல செய்து
நீ இட்ட
பொங்கல் பானை கோலம்...
சுமதி வரை நீ
செய்த திருமண அலங்காரங்கள்...
சீமந்த
பூ ஜடைகள்....

உடல் பரிசோதனைக்காக
ஒவ்வொரு மாதமும்
தொடர் வண்டியில்
அப்பல்லோ சென்றது....

இன்னும்
இதுபோல
இன்பமான நினைவுகள் பல....

இதய நோய்...
பக்கவாதம்...
எதுவும் உன்
தன்னம்பிக்கையை
தளர்த்தியது இல்லை

பண கஷ்டமோ
மகன் தொல்லையோ...
உன் சுறுசுறுப்பை
குறைத்ததில்லை....

உடல் நலிந்த போதும்
உன் உதவி மனப்பான்மையை
உதறியதில்லை....

 அரசாங்க மருத்துவமனையோ
அப்பல்லோ ஆஸ்பத்திரியோ
உன் மன உறுதியை
உருக்குலைத்ததில்லை....

என் அண்ணன் தங்கை
உன் மகளுடன்
உறவாக இருப்பது
அவர்களாக ஏற்படுத்திக்கொண்ட
நட்பு
எனக்கும் அவளுக்குமான
உறவோ
உன் ஆறாவது மகனாக நானாகி
உண்டான
உடன் பிறவா சகோதர
உறவு

மலேசியா செல்லும்
ஒவ்வொரு முறையும்
நீ இந்தியாவில் இருக்கும் போதுதான்
மரிப்பேன் என்றாய்...
அதை நிரூபித்தும்
காட்டி விட்டாய்....

எதோ ஒரு
புள்ளியில் உன்னுடன்
ஒரு இடைவெளி...
உரசலோ புரசலோ
சண்டையோ சச்சரவோ
எதுவும் இல்லை...
இருந்தாலும் வந்துவிட்டது
இடைவெளி...

மாலை ஐந்து மணிக்கு
பாசமாக பேச அழைத்தாய்....
பிறகு வருகிறேன் என
பறந்து விட்டேன்....
காலை ஐந்து மணிக்கு
காலமாகி விட்டாய்.....

மரணம் உணர்த்தும் வரை
மற்றவர்கள் அருமை
மனிதர்களுக்கு புரிவதில்லை.....

ஒவ்வொரு மார்கழியும்
உனக்கு மறுபிறப்பு...
கால் நூற்றாண்டு
காலனுடன் போராடி விட்டாய்...
கடைசியாக தான் உன் வாழ்வில்
கிடைத்தது ஓய்வு....

உன் போல
பிறந்த வீட்டின் மீதான
குறையாத பாசமும்
புகுந்த வீட்டின் மீதான
அளப்பரிய விசுவாசமும்
இன்றைய பெண்களிடம்
இம்மியளவும்
இருக்க போவதில்லை.....

தன்னம்பிக்கையின்
தாயே...
உழைப்பின்
உறைவிடமே...
ஊக்கத்தின்
உதாரணமே....

உன்னை போல ஒருவளை
உலகெங்கும் காணப்போவதில்லை....
உலகை விட்டு நீ சென்றுவிட்டாய் என்ற
உளறலையும் நம்பபோவதில்லை....

தைரியமான பெண்களிலும்....
சோர்வடையா உழைப்பாளிகளிடமும்...
புதுமையான கோலங்களிலும்....
நேர்த்தியான ஆலங்காரங்கலிலும்...
நீ எங்களுடன்
வாழ்ந்து கொண்டுதானே
இருக்கப்போகிறாய்.....

















Monday, December 10, 2012

இந்த காதல் தான்....


(கற்பனையில் தோன்றிய ஒரு காதல் கவிதை....தலைவன் பார்வையில் ....)

ஆயிரம் குழந்தைகளை
ஆராய்ந்தால்
அதிகபட்சம்
ஆயிரம்  குழந்தைதனத்தை
அறியலாம் ...
என் காதலி ஒருவளிடம்
எட்டாயிரம் குழந்தைதனத்தை
எளிதில்
எண்ணி விடலாம்...
சுருக்கமாக சொன்னால்
உருவத்தில்
குமரி போன்ற குழந்தை
உணர்வுகளில்
குழந்தை போன்ற குமரி....
கள்ளமில்லா சிரிப்பு....
கருணையான பார்வை....
ஈரமான இதயம்....
தவறாக தொட்டலோ
பேசினாலோ கூட
பகுத்தறியாத பாவை.....
சண்டை என்று வந்தாலோ
சரிசமமாய்
சாமாளிக்கும் பாதகி....
சிரித்து பேசுவாள்
சிறிய விஷயத்திற்கு
சீறுவாள்....
கத்திகொண்டே பேசுவாள்
பேசிக்கொண்டே கதறுவாள்...
கன்னட அணைகள் திறப்பதுதில்லை
கன்னியின் கண்ணனை
திறந்தாலோ நிற்பதில்லை...
இனி பேசுவது
கடினம் ...
சாமாளிப்பது
அரிது....
துண்டித்து விடுவேன்
தொலைபேசியை....
கோபம் வரும்..
குமுறல் எழும்....
ஆண்மை ஆர்ப்பரிக்கும்
காதல் சாந்தபடுத்தும்....
மீண்டும் நானே அழைப்பேன்
எதுவும் நடக்காதது போல
எதார்த்தமாய் பேசுவேன்...
குழந்தையாய் சிரிப்பாள்...
காது வலிக்க மீண்டும்
தொடங்கிவிடுவாள்....
அடம் பிடிக்கும் குழந்தையை
அடித்த பிறகு
அணைக்கும்
அன்னை
தோற்றா போகிறாள்???
இது தோல்வி என்றால்
என் குழந்தைக்காக
தினம் தினம்
தோற்க நான் தயார்....
 எதுவுமே நடக்காதது போல
பேசினாலும்...
மறுகணமே துயரம்
மறந்து சிரிக்கும்
மனது....
இந்த காதல் தான்
எனக்கு இன்னும் உயிரூட்டுகிறது.....
சூரியனால்
சிரிக்கும்   தாமரை போல
தினம் தினம்
உன்னாலே
உயிர்பிக்கப்படுகிறேன் .....

(தலைவியின் பார்வையில்)

இருவர் மீதும் தவறு
இருக்காது
இருந்தாலும் எப்படியோ
இடையில் வந்துவிடுகிறது
வாக்குவாதம்...
என் வார்த்தைகள் மிகும் பொழுது
உன் மௌனம்
எனது உச்ச சுருதியில்
உனது அடக்கம்....
இந்த
இடைவிட பேச்சு
எப்பொழுதும்
என்
அழுகையில் முடியும்
அழுகைக்கு அனுதாபம்
என்றுமே
எனக்கு கிடைத்ததில்லை
மாறாக கிடைப்பது
தொலைபேசி துண்டிப்பு...
வெறுமையாய் இருக்கும்
தனிமை கொல்லும்...
தவறுகள் புரியும்....
எதிர்பாராமல் வரும் உன் அழைப்பு...
எதுவுமே நடக்காதது போல மீண்டும்
எதார்த்தமாய் பேசுவாய்
இந்த காதல் தான்
இன்னும் எனக்கு உயிரூட்டுகிறது...
காந்தத்தால்
கவரப்படும்
இரும்பு துகள் போல
என் ஒவ்வொரு
அணுவும்
உன்பால் கவரப்படுகிறது ......

Thursday, November 8, 2012

சம்மட்டியால் அடிக்கிறது

(தூக்கம் வராத ஒரு இரவில் கிறுக்கியது....)

வீட்டை விட்டு வெளியேறும் பொழுதும்...
விமான நிலைய நண்பர்களின்
விரல்கள் விடு படும் பொழுதும்...
விமானம் ஓடுதளத்தில் ஓடி
மீனம்பாக்கம் கத்திபாரா அடையாறு
சாந்தோம் மெரீனா மறைந்து
கடல் மட்டுமே தெரியும் பொழுதும்....
விமானத்தில் பலர் உடன் இருந்தும்
அந்நியமாய் தோன்றும் பொழுதும்...
மலேசியா மண்ணை மிதிக்கும் பொழுதும்...
அன்றிரவு திடீரென்று விழித்து
அருகில் அவிநாஷை தேடும் பொழுதும்...
சமைக்கும் போது சுட்டு கொண்டோ...
சாதாரணமாய் இடித்து கொண்டோ...
அம்மா என்று அலறும் பொழுதும்...
வேலையை விட்டு அலுப்பாக வந்து
படுக்கையில் விழுந்தவுடன்
கையில் கிடைக்காதா
காபி என எங்கும் பொழுதும்...
ஏனோ தானோ என்று சமைத்து..
பசியில் சாப்பிட அமர்ந்தவுடன்
காரத்திற்கு தண்ணீரோ...
சுவைக்கு உப்போ...
தயிருக்கு கரண்டியோ....
மறந்து போய்
மறுபடியும் எழுந்து எடுக்கும் பொழுதும்...
பாத்திரங்களை கழுவி
நிம்மதியாய் நிமிரும் போது
கண்ணில் படும்
கழுவாத பாத்திரத்தை காணும் பொழுதும்...
துணைக்கு யாரும் இல்லாத போதும்
தூக்கம் வராத இரவுகளிலும்
அலைபேசியில் அழைத்தும்
அடுத்தவர் எடுக்காத பொழுதும்...
பிறந்த நாள்...
மண நாள்....
பொங்கல்...
தீபாவளி...
வந்த சுவடு தெரியாமல்
மறையும் பொழுதும்...
வீட்டில் விசேஷமோ....
ஊரில் திருவிழாவோ...
செல்லவும் முடியாமல் சோகத்தை
சொல்லவும் முடியாமல் தவிக்கும் பொழுதும்....
கஜினி திரைப்படத்தில்
அசினை மண்டையில்
அடிப்பது போல ...
சம்மட்டியால் அடிக்கிறது
தனிமை...... 

Wednesday, August 29, 2012

தந்தையாக பிறந்தேன்......

(இன்று ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொண்டேன்... மதிய வேளை... சாப்பிட்ட  அசதி... தூங்காமல் இருக்க எழுதிய கவிதை.... ஒரு மணி நேரத்தில் எழுதியது.. கருத்துக்கள் அவசியம் தேவை...)

நீ கருவாகும் முன்னே
என் கற்பனையில் உருவானவள்.....
நான் மணமாகும் முன்பே
என் மனதில் மகளானவள்....
நீ பிறப்பதற்கு முன்னே
மைதிலி ரங்கநாயகி என பெயர் கொண்டவள்....
கை பிடித்ததும்...
கட்டில் இட்டதும்...
கடல் கடந்ததும்....
பெண் பிறக்கும் என
பெரியோர் குறித்த நேரத்தில் தான்....
என் மனக்குதிரை
லாடம் கட்டப்பட்டு
உன்னை நோக்கியே பயணப்பட்டிருந்தது....
மனைவியை கூட
மகள் சுமக்கும்
மகராசியாய் தான் பார்த்திருக்கிறேன்....
பெண் பித்து பிடிக்க வேண்டிய சமயத்தில் கூட
பெண் பிள்ளை பித்து பிடித்து அலைந்திருக்கிறேன்....
என் கணக்கில் ஆறாவது வாரம்
நீ இருப்பதாய் கண்டு கொண்டேன்...
ஏழாவது வாரம்
ஒரு சிறு புள்ளியாய் படம் பிடித்து
நீ இருப்பதை உறுதி செய்தார்கள்....
புள்ளி, பட்டாணி, கோலி,
கத்திரிக்காய் போல...
வாரா வாரம்  வளர்ந்து வந்தாய்....
விதி வசத்தால் உன்னை
விட்டு பிரிந்திருந்தாலும்
உள்ளத்தால்
உன்னுடனே மட்டுமே இருந்தேன்.....
ஜோதிடமும்...
சீன கணக்கும் நீ
ஆண் தான் என
ஆணித்தரமாய் உரைத்தது....
உன் அம்மாவின்
முகம் கறுத்துவிட்டது ...
மூக்கு பெருத்துவிட்டது...
ஆண் தான் பிறக்குமென
ஆளுக்கு ஆள்
அடித்து கூறினார்கள்.....
விஞ்ஞான வளர்ச்சியால்...
முப்பத்தி இரண்டாம் வாரம் உன்
முகம் பார்க்க முடிந்தது...
நீ முகம் சுளித்ததும்...
வாய் குவித்ததும்....
பாரதிராஜா கதாநாயகி போல
முகம் மூடியதும்....
சிலிர்த்து போனேன்....
அந்த நாளும் வந்தது...
உலகை நீ காண
உன் அம்மா உடல் வலி பொறுத்தாள்...
நான் அன்று பட்ட
மன வலியும்... பயமும்...
என் வாழ்நாளில் ஒரு நாளை  குறைத்திருக்கும்...
என்னை பெற்றவளும்...
உடன் பிறந்தவளும்...
உடன் பிறக்காத உற்றவனும்...
துணையாய் எனக்கிருக்க...
பதினாறு மணி நேர
போராட்டத்திற்கு பின்னே...
அழகாய் ஒலித்தது உன் அழுகை....
அழுத்தமாய் நீ
அழும் போதே
அறிவித்து விட்டேன் நீ பெண் என்று...
அதையே உறுதி செய்தால் தாதி....
முதன் முதலாய் அத்தையின்
கைகளில் உன்னை கொடுத்த பொழுது...
உன் முகம் பார்க்க துடித்தாலும்...
உனை கைகளில் ஏந்த தவித்தாலும்....
உன்னை ஈன்றவளின்
முகம் முதலில் காண்பதே
முறை என்று பொறுத்திருந்தேன் .....
முதலில் அவளை கண்டதும்
முத்தம் ஒன்று அழுத்தமாய் தந்தேன்...
மொத்தத்தையும் அதுவே உணர்த்திவிட்டது....
கண்ணீரும் மௌனமாய் நிமிடங்கள்
கரைந்தது....
கடைசியில் உன்னை என்
கைகளில் தந்தார்கள்....
தில்லி என உனை செல்லமாய்
அழைத்து கொண்டேன்....
அழுது கொண்டேன்...
அணைத்து கொண்டேன்....
சிலிர்த்து போனேன்...
சிறகில்லாமல் பறந்து கொண்டேன்....
பரவசம் எனும் வார்த்தையை...
புரிந்து கொண்டேன்....
வார்த்தைகள் வராமல்
திக்கி கொண்டேன்....
அணு அணுவாய்
அங்கங்கள் தொட்டு
ரசித்து கொண்டேன்.....
சில நொடியில்
நான் இறந்து மறுபடியும்
உன் தந்தையாய் பிறந்து கொண்டேன்.......

Saturday, May 26, 2012

என் வீடு.....

எனக்கு என் வீடு என்றாலே என் பழைய வீடு தான் நினைவுக்கு வரும். எங்கள் நினைவுகளிலும் உணர்வுகளிலும் கலந்த வீடு.... இன்னும் என் கனவுகளில் வரும் வீடு... அது ஒரு பெரிய ஓட்டு வீடு.... வாசற்படிக்கு முன்பே ஒரு பெரிய தாவாரமும் அதன் ஓரத்தில் ஒரு திண்ணையும் இருக்கும்... தினம் தினம் இரவில், அப்பா அந்த திண்ணையில் அமர்ந்து பால்  குடித்து கொண்டே நாட்டு நடப்புகளை நண்பர்களுடன் பேசுவார்.... நாங்கள் தெரு தாவாரத்தில் விளையாடுவோம்... அதன் ஓரத்தில் இருக்கும் பன்னீர் மரத்தின் வாசம் இன்னும் என் நாசியில் உணர முடிகிறது.... இரண்டு தாவாரங்களை தாண்டி சென்றால் பெரிய திறந்த வாசல்.... அதன் இடது புறம் தோட்டத்திற்கு செல்லும் நடை பாதை.... அதன் தரை மிக மிக மிருதுவாக இருக்கும். இன்றைய கிரானைட் எல்லாம் அதனிடம் பிச்சை வாங்க வேண்டும்.... வெறும் தரையில் அதன் மேலே படுத்திருக்கும் சுகமே தனி... திறந்த வாசலுக்கு முன்பு ஒரு நடை பாதை இருக்கும்.... காலையில் செய்தி தாள் படிக்க ஏதுவாக  ஒரு பெரிய மேஜை இருக்கும்.... தலைவர்கள் படம் உட்பட பல புகை படங்கள் மாட்ட பட்டு இருக்கும்.... 
திறந்த வாசலுக்கு வலப்புறம் பெரிய கூடம்.... சிவப்பு தரை... வெயில் காலங்களில் அங்கு படுத்தால் குளிரும்.... கூடத்தை தாண்டி நடை பாதை வழியே சென்றால் என் அம்மாவின்  சமஸ்தானமான  சமையலறை வரும்....  சமைக்கும் இடம்... அதை ஒட்டி உணவருந்த நீண்ட இடம்... அதை ஒட்டிய பெரிய கூடம்.... கூடத்தில் அரிசி சேமிக்க மச்சு... அதை தாண்டி தானிய சேமிப்பு அறை... அங்கே ஆளுயர பானைகள் இருக்கும்... தோட்டத்திற்கு செல்லும் நடை  பாதை. அதன் பிறகு விசாலமான மாட்டு தொழுவம்... தோட்டம்...இதை எல்லாம் தவிர பல அறைகளும் அந்த வீட்டில் உண்டு.எந்த    பொருள்  வாங்கினாலும்  அதை  வைக்க  ஒரு  சரியான  இடம்  அந்த  வீட்டில் இருக்கும்  என அம்மா சொல்லி கொண்டே இருப்பாள்.. ஓடு  திருப்பிய பணத்தில் மூன்று வீடு கட்டி இருக்கலாம் என்று அலுத்தும்கொள்வாள்.  மழை காலங்களில் திறந்த வாசில் நீரில் நிரம்பி விடும்.நாங்கள் அனைவரும்  வாளியில் நீரை வாரி இறைப்போம்.... எதிர் வீட்டிலும் இதே கூத்து நடக்கும். 

இந்த  வீட்டை  இடித்து புது வீடு  கட்டும் திட்டம் வந்தது.அங்கு  கடைசியாக  தூங்கிய  இரவு.     ஒவ்வொரு தூணையும் பிடித்து டாட்டா  சொல்லியது.... கிட்ட  தட்ட  இருபது  வருடங்கள்   ஓடி விட்டன.... இன்று  இது  போல  வீடுகள்  காஞ்சியில்  விரல் விட்டு எண்ணி விடலாம்.... இப்படியெல்லாம் வீடுகள் இருக்கும் என்று என்  பிள்ளைகளுக்கு சொல்ல கூட  அது  போல  வீடுகள்  எதிர்  காலத்தில்  இருக்க  போவதில்லை. இன்றைய    வீடுகளில்  வெயில்  மழை  கூட  அன்னியமாகி  விட்டது. உள்ளே  சென்று பூட்டி கொண்டால் எதுவும் தெரிவதில்லை... மின்சாரம்,மின்விசிறி தற்பொழுது குளிர் சாதனம் இல்லாமல் இருக்க முடிவதில்லை... அந்த வீடுகளில் நடந்ததே ஒரு பயிற்சியாக இருந்தது... இன்று சமையலறையை தாண்டினால் வாசற்படி என்றாகி விட்டது....

எட்கர் கெஸ்ட் என்னும் ஆங்கில கவிஞர் இப்படி  சொல்கிறார்... "It takes a heap o' livin' in a house t' make it home".  அன்பு பாசம் பாரம்பரியம் இது எல்லாம்  சேர்த்து கட்டிய பெரிய பொட்டலம் வீடு... இது தான் அந்த ஆங்கில வரியின் சாராம்சம்....

Friday, April 1, 2011

முடியாத கனவு.....

அம்மாவின் அரவணைப்பு.....
அனைவரின் பாசம்...
அண்ணன் தங்கையுடன் விளையாட்டு....
சாகாத டமார குட்டி கதை....
மீரா அக்காவுடன் சினிமா...
சாரதா அத்தையுடன் சுற்றுலா....
அப்பாவின் ஹீரோ மெஜெஸ்டிக்...
பெட்ரோல் வாசனையின் சுகம்.....
பள்ளியின் செல்ல பிள்ளை....
கோகுலம்... சிறுவர் மலர்....
குறுக்கெழுத்து போட்டியில் வென்ற 21 ரூபாய்...
விகடனில் முதலில் படித்த பூக்குட்டி....
சென்னை பயணங்கள்....
அரும்பிய முதல் மீசை... உடைந்த குரல்....
எனக்கென நண்பர்கள்... நண்பிகள்...
அரசியல் ஆர்வம்... இலக்கிய பரிட்சியம்....
பள்ளிகூட நினைவுகள்....
கல்லூரி கனவுகள்... கவிதைகள்....
நண்பர்களுடன் சண்டைகள்....
தளும்பிய கண்கள்....
பேருந்து அரட்டை... பின்னிரவு கலாட்டா....
அணிவகுத்த பொறுப்புக்கள்....
முகத்தில் அறைந்த வேலையின்மை....
விரிவுரையாளர் வாழ்க்கை.....
மதிக்கின்ற மாணவர்கள்....
சென்னையின் சொர்கவாசம்.
மலேசியாவின் நரகவாசம்....
துய்த்து முடிப்பதற்குள் எழுப்பிய அப்பா...
உனக்கு திருமணம் என்றார்....